< Back
மாநில செய்திகள்
விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்
மாநில செய்திகள்

விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்

தினத்தந்தி
|
24 Feb 2024 9:26 AM GMT

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பாஜ.க.வில் இன்று சேர்ந்தார்.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தவர் விஜயதாரணி. இவர் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3-வது முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வசந்தகுமார் எம்.பி. மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதாரணி போட்டியிட முயற்சித்ததாக பேசப்பட்டது. எனினும், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு அந்த இடம் வழங்கப்பட்டது.

அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் கட்சி தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று அவர் காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் தலைமை இசைவு கொடுக்கவில்லை எனவும் இதனால், அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக பேச்சு எழுந்தது. இதற்காக டெல்லியில் அவர் முகாமிட்டு இருந்தார். ஆனால் பாஜகவில் இணைவதாக வெளியாகும் தகவலுக்கு அவர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் பாஜ.க.வில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தலைமைக்கு அவரின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விஜயதரணியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அஜய்குமார் கூறியிருப்பதாவது: சட்டமன்றக் குழு தலைவர் பேசியும் கடைசி வரை விஜயதரணி புறக்கணிப்பு செய்தார். டெல்லி தலைமை நேரில் பேச வாய்ப்பு கொடுத்தும் விஜயதாரணி புறக்கணித்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்