< Back
மாநில செய்திகள்
மிஸ்டு கால் காதல் கணவரை உதறிவிட்டு வந்த சென்னை கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்
மாநில செய்திகள்

"மிஸ்டு கால் காதல்" கணவரை உதறிவிட்டு வந்த சென்னை கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்

தினத்தந்தி
|
17 Oct 2022 12:45 PM GMT

கணவன், மகன்கள் உதறிவிட்டு வந்த பெண்ணை புடவையால் கழுத்து இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

கணவன், மகன்கள் உதறிவிட்டு வந்த பெண்ணை புடவையால் கழுத்து இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை அருகில் உள்ள கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 36), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவருக்கும் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி நதியா (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தங்கராஜின் செல்போன் எண்ணில் இருந்து தவறுதாலாக சென்ற செல்போன் கால் மூலம் அவருக்கும், நதியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

தங்கராஜ் வேலைக்காக சென்னைக்கு செல்லும் போது நதியாவை சந்தித்து வந்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நதியாவின் கள்ளகாதலை அறிந்த பார்த்தசாரதி அதனை கைவிடமாறு கூறியுள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நதியா அவரது கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு நேற்று முன்தினம் இரவு கண்ணக்குருக்கை கிராமத்தில் உள்ள தங்கராஜியின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தங்கராஜிடம், நான் இனிமேல் உன்னோடு தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

இதைகேட்டு தங்கராஜின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தங்கராஜ் மற்றும் நதியாவிடம் தகராறு செய்து உள்ளார். மேலும் வேதனை அடைந்த நதியா தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்து சென்றார்.

பின்னர் தங்கராஜ் அவரை சமாதானம் செய்ய பெரியகோளாப்பாடி மலை குன்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது தங்கராஜிக்கும், நதியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், நதியாவை அவரது புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

மலை குன்று பகுதியில் நீண்ட நேரமாக சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் தங்கராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். நதியா இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் உடனடியாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து நதியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் தப்பியோடி தங்கராஜை தேடி சென்றனர். தொடர்ந்து நேற்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். கணவன், மகன்களை உதறிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்