< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

தினத்தந்தி
|
12 Jan 2024 12:02 PM GMT

செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2016-17 ம் ஆண்டில் திடீரென பல லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்த நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பண பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி அல்லி மேற்கொண்டார். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி அல்லி இன்று மீண்டும் விசாரணை செய்தார். இதில், வழக்கில் ஆதாரங்கள் திருத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்த உண்மையான தொகையை திருத்தி பொய்யான தொகையை எழுதியுள்ளனர். இதற்கான ஆதாரங்களும் உள்ளன. அவரிடம் இருந்து பெறப்பட்ட பென்டிரைவில் உள்ள தகவல்கள் திருத்தபட்டுள்ளன. மேலும் விவசாயம் மூலமாக பெறப்பட்ட வருமானத்தை அமலாக்கத்துறையினர் சேர்க்கவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் ஆவணங்களில் உள்ள தேதிகளை விசாரணைக்கு ஏற்ற வகையில் மாற்றியுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

பின்னர் அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2016-17 ம் ஆண்டில் திடீரென பல லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து பெறப்பட்ட பென்டிரைவில் வேலை வாய்ப்பு தொடர்பாக அவர் யார் யாரிடம் இருந்து எவ்வளவு ரூபாய் பெற்றுள்ளார் என்ற தகவல் உள்ளதாக கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்