< Back
மாநில செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரி
மாநில செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்: கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
24 Jun 2023 7:30 PM GMT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பாப்பாரப்பட்டியில் கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி கருணாநிதி நூற்றாண்டு விழாவைவையொட்டி மாநிலம் முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை கலெக்டர் பார்வையிட்டார். இதில் உதவி கலெக்டர் கீதாராணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், பேரூராட்சி தலைவர்கள் பிருந்தா, மனோகரன், வீரமணி, பென்னாகரம் அரசு மருத்துவமனை டாக்டர் கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தொடர் சிகிச்சை

இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பியல் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல், மனநலம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், காசநோய், தொழுநோய், கொரோனா பரிசோதனைகள், தோல் சம்பந்தமான நோய்கள் எச்.ஐ.வி. கண்டறியும் சோதனை போன்ற பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாமில் இருதய நோய் நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பபை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். பொதுமக்கள் மருத்துவ முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்