< Back
மாநில செய்திகள்
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தினத்தந்தி
|
23 May 2022 5:09 PM GMT

தென்னை மரங்களில் ஏற்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் யோசனை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை:

வெள்ளை ஈக்கள் தாக்குதல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னையை தாக்கி அதிக சேதத்தை உண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும்.ரூகோஸ் வெள்ளை ஈ பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டுபொறிகள் ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து குறைக்கலாம். இப்பூச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை அதிக அளவில் நடமாட்டம் இருக்கும்.

கட்டுப்படுத்தலாம்

அதனால், விளக்குப்பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இலைகளின் கீழ்பகுதியில் காணப்படும் முட்டைகள் இளம்பருவம் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத்தெளிப்பான் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீச்சி அடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.தண்ணீரில் 3 கிராம் அளவில் ஜசேரியாபியூமோசோரோசே என்ற பூஞ்சாணத்தை ஒட்டும் திரவத்துடன் 5 கிராம் நிர்மா பவுடர் அல்லது காதி சோப் கரைசலை தெளிக்கலாம். ரூகோஸ் வெள்ளை ஈக்களை தாக்கும் என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகளின் கூட்டுப்புழு பருவத்தை சேகரித்து புதிதாக சுருள் வெள்ளை ஈ தாக்கப்பட்ட தோப்புகளில் விடுவதன் மூலமும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும், இப்பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்சாண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் மைதா மாவு பசையை தண்ணீரில் கரைத்து தென்னை இலைகளின் மேல் பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் வேப்பங்கொட்டை, எண்ணை கரைசல், மீன் எண்ெணய், மண்ணெண்ணெய் சோப்புக்கரைசல் தெளிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்