< Back
மாநில செய்திகள்
குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசி தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசி தேரோட்டம்

தினத்தந்தி
|
5 March 2023 7:00 PM GMT

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடம்பவனேசுவரர் கோவில்

கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரத்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 2-வது தலமாகும். இக்கோவிலில் மாசி மகாமகப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து அன்றிலிருந்து தினந்தோறும் காலை பல்லக்கில் சுவாமியின் வீதி உலா நடைபெற்றுவருகிறது. இரவு நந்தி, யாளி, பூதம், அன்னம், கைலாச, கமல வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை, கிளி, இந்திர விமானம், குதிரை வாகனம் ஆகியவற்றில் உற்சவ சாமிகளின் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பலவகை வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நேற்று காலை திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகள் வந்தது.

அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

தேரோட்டத்தையொட்டி கோவிலை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர் மோர், பானகம் வழங்கப்பட்டன. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு சுவாமியின் வீதிஉலா நடைபெற்றது.

இன்று (திங்கட்கிழமை) குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கற்பவிருட்சம், காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா நடைபெற உள்ளது. மார்ச் 8-ந்தேதி சண்டிகேசுவரர் உற்சவம், 9-ந்தேதி பிராயசித்த அபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்