< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமான 4 மாதங்களில் சோகம்
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: திருமணமான 4 மாதங்களில் சோகம்

தினத்தந்தி
|
28 July 2024 6:28 AM GMT

தனிகுடித்தனம் செல்வது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பட்டி நாடார் காலனியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகள் நித்யா (வயது 21). இவரும், தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் தினேஷ் (23) என்பவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் ஆவர். நித்யா கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தனிகுடித்தனம் செல்வது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நித்யாவின் அண்ணன் விஜி அங்கு வந்து சமாதானம் செய்துவிட்டு சென்றார்.

இதை தொடர்ந்து நித்யா தூங்க சென்றார். நேற்று காலை தினேஷ் எழுந்தபோது காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தாரமங்கலம் போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக புதுப்பெண்ணின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓலைப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்