< Back
மாநில செய்திகள்
சிறுபான்மையினர் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

சிறுபான்மையினர் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
1 Jun 2023 6:45 PM GMT

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி கடன்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தனிநபர் கடனை பொறுத்த வரையில் திட்டம்-1-ல் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம்-2-ல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதேபோல் சுயஉதவி குழுக்களை பொறுத்த வரையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கல்வி கடனும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கிராமபுறத்தில் இருந்தால் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரம் உள்ளவர்களும், நகர்புறமாக இருப்பின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் உள்ளவர்களும் தகுதியானவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பிக்கலாம்

எனவே நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க வேண்டும். மேற்கண்ட கடன் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடன்உதவி பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்