< Back
மாநில செய்திகள்
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
மாநில செய்திகள்

நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

தினத்தந்தி
|
22 July 2024 7:08 AM GMT

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், நில மோசடி வழக்கில், கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதற்கிடையே, விசாரணைக்காக அவரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்