< Back
மாநில செய்திகள்
கண்டாச்சிபுரம் அருகே ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது
விழுப்புரம்
மாநில செய்திகள்

கண்டாச்சிபுரம் அருகே ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
22 Jun 2023 6:45 PM GMT

கண்டாச்சிபுரம் அருகே ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

கண்டாச்சிபுரம் அடுத்த மடவளாகம் கிராமத்தில் சவுந்தர்ய ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வரபூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு யஜமானார் சங்கல்பம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகளும், 26-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், அஸ்வபூஜை, அனைத்து கிராம கோவில் அபிஷேக வழிபாடும், மாலை 6 மணிக்கு மிருத்ஸங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், தனபூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது.

27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மூர்த்தி ஹோமம், சாமிகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும், மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, யாத்ரா ஹோமம், உபச்சார பூஜை, 28-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷ சாந்தி பூஜை, சூரிய பூஜை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, சோம கும்ப பூஜை, பிரம்மச்சாரி பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நாளான 29-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு சுமங்கலி பூஜை, நாடி சந்தானம், 4-ம் கால யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, ராமநாதீஸ்வரர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்தி மகா அபிஷேகமும், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி சாமி உற்சவம், வீதிஉலா நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெற்றிவேல், திருப்பணிக்குழு அன்பர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்