< Back
மாநில செய்திகள்
நவராத்திரி விழாவையொட்டிவிழுப்புரத்தில் விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

நவராத்திரி விழாவையொட்டிவிழுப்புரத்தில் விற்பனைக்கு வந்த கொலு பொம்மைகள்

தினத்தந்தி
|
13 Oct 2023 6:45 PM GMT

விழுப்புரத்தில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தது.

நவராத்திரி விழா

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி விழாவாகும்.

நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன் என்ற அசுரனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாகும். இதனை நினைவுகூறும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள், விலங்கின பொம்மைகள், இயற்கை காட்சிகள் அடங்கிய பொம்மைகள், தெய்வீக பொருட்கள் உள்ளிட்ட பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

ஒவ்வொரு நாளும் இந்த விழா நாட்களில் இரவில் பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். துர்கா தேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் வழிபாடாக இருக்கும்.

இத்தகைய சிறப்புமிக்க நவராத்திரி விழாவானது நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

விற்பனைக்கு வந்த கொலுபொம்மைகள்

இவ்விழாவின்போது பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகள், சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்வது நவராத்திரியின் அங்கமாக உள்ளது. வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜையாகும்.

இந்த நிலையில், விழுப்புரம் திரு.வி.க. சாலையில் பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தது.

இந்த கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இ்தை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்