< Back
மாநில செய்திகள்
பருவநிலை மாற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை
சிவகங்கை
மாநில செய்திகள்

பருவநிலை மாற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை

தினத்தந்தி
|
6 July 2022 7:35 PM GMT

பருவநிலை மாற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் கூறினார்.

காரைக்குடி,

பருவநிலை மாற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் கூறினார்.

யூனியன் கூட்டம்

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் கேசவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் கார்த்தி மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

எஸ்.எம்.கே. சொக்கலிங்கம் ; டெண்டர்களுக்கான நிதிஒதுக்கீட்டிற்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை உயர்த்தியதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்கிறேன். வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான வேலைகளை தேர்வு செய்து விரைவில் பணிகளை தொடங்க வேண்டுகிறேன்.

திட்டப்பணி

சுப்பிரமணியன்: திட்டப்பணிகளை முடிப்பதில் காலதாமதம் செய்யும் ஒப்பந்தக்காரர்கள் உரிமத்தை ரத்து செய்து மீண்டும் டெண்டர் கோரி பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன். பை-பாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தின் எதிரே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி தொடர்கிறது. எனவே அந்தபகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுகிறேன்.

ஆணையாளர் கேசவன்: விபத்துக்களை தவிர்க்க புதிய சேவைச்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேவையான நிதி ஆதாரம் கிடைக்கப் பெற்றவுடன் மக்களின் தேவையறிந்து, உறுப்பினர்களின் கருத்தறிந்து அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை தேர்வு செய்து வேலைகள் தொடங்கப்படும்.

கொரோனா

தலைவர் சரண்யா செந்தில்நாதன்: கொேரானா பாதிப்பு குறித்து அரசு எச்சரித்துக்கொண்டே உள்ளது. கடந்த முறை ஏற்பட்ட பிரச்சினைகளை மனதில் நிறுத்தி பாதுகாப்பாக இருக்க விடுகிறேன். இந்தநிலையில் எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலை இரு மாதங்களுக்கு நிலவும் என ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், இருமல், தலைவலி, சுவாச பிரச்சினைகள், இதய நோய்கள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற நோய்கள் வரக்கூடும்என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே ஆரோக்கியமான உணவுகள் பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். சுகாதாரமான சூழலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பிரசாரம்

சுகாதார தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்ய தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றிய பகுதிகளில் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள், குறைகளுக்கான தீர்வுகள் குறித்த, உறுப்பினர்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு கூட்டம் நடைபெற்றது. மேலாளர் கண்ணன் நன்றி கூறினார். முன்னதாக சாக்கோட்டை ஒன்றிய அலுவலம் முன் அரசு பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்