< Back
மாநில செய்திகள்
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டது
வேலூர்
மாநில செய்திகள்

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டது

தினத்தந்தி
|
1 Jun 2022 2:17 PM GMT

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதித்து மேம்பாலம் மூடப்பட்டது.

காட்பாடி

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதித்து மேம்பாலம் மூடப்பட்டது.

காட்பாடி ெரயில்வே மேம்பாலம்

மங்களூரு -விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடியில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைந்து உள்ளது. இது தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் மேம்பாலம் ஆகும்.

இந்த மேம்பாலம் வழியாகத்தான் சித்தூர், திருப்பதிக்கு பஸ்கள், லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன,.

தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர மற்றும் லாரிகள், பஸ்கள் சென்று வந்ததால் மேம்பாலம் வலுவிழந்தது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் காணப்பட்டன.

மேம்பாலம் மூடப்பட்டது

இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பல்வே தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மேம்பாலம் பழுது பார்க்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு வசதியாக மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.

அதேபோல் மறுபுறத்தில் குடியாத்தம் கூட்ரோடு அருகே மேம்பாலத்தில் தடுப்புகள் வைதக்கப்பட்டது.

டவுன் பஸ்கள்

இதனை தொடர்ந்து பாகாயத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும் டவுன் பஸ்கள் அனைத்தும் காட்பாடி ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டன. காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கிய பயணிகள் மேம்பாலத்தின் நடை பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அந்த வழியாக சென்று குடியாத்தம் கூட்டு ரோட்டில் இருந்து குடியாத்தம் பஸ்களில் பயணித்தனர்

அதேபோல் குடியாத்தத்தில் இருந்து வந்த பயணிகள் குடியாத்தம் கூட்டு ரோடு அருகே இறங்கி மேம்பால நடை பாதை வழியாக நடந்து வந்தனர். பின்னர் காட்பாடி ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பஸ்களில் ஏறி வேலூர், திருவலம் பகுதிக்கு சென்றனர்.

மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன

மேம்பாலம் வழியாக சென்ற பஸ்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் சித்தூர் பஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மட்டும் தாராபடவேடு பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

டவுன் பஸ்கள் வந்தபோது போக்குவரத்து போலீசார் தடுப்புகளை எடுத்து வழிவிட்டனர்.

லத்தேரி, குடியாத்தம் செல்லும் பஸ்கள் மற்றும் கார்கள் சில கழிஞ்சூர், ஜாப்ராப்பேட்டை, கரசமங்கலம் வழியாக லத்தேரி குடியாத்தத்திற்கு பயணித்தனர்.

ஒரு சில வாகனங்கள் மதிநகர், ஹவுசிங் போர்டு வழியாக சென்று காட்பாடி செங்குட்டை, கல்புதூருக்கு சென்றன.

கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்

இந்த மாற்று பாதையில் சாலைகள் சரியாக இல்லை. குண்டும் குழியுமாக உள்ளது. மின்விளக்கு வசதி இல்லை என அதனை பார்வையிட அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தெரிவித்தார். மேலும் இந்த மாற்றுப் பாதையில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் அட்டகாசம் அதிகமாக இருக்கும். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இந்த மாற்றுப் பாதையைஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். அப்போதுதான் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

======

மேலும் செய்திகள்