< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலுக்கு இடையூறு : கணவனின் ஒரு கை, காலை எடுக்க  கூலிப்படையை ஏவிய மனைவி
மதுரை
மாநில செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு : கணவனின் ஒரு கை, காலை எடுக்க கூலிப்படையை ஏவிய மனைவி

தினத்தந்தி
|
23 Nov 2022 8:01 PM GMT

மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படுத்துவார் என கருதி வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை கூலிப்படையை ஏவி வெட்டிச்சாய்த்த மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படுத்துவார் என கருதி வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை கூலிப்படையை ஏவி வெட்டிச்சாய்த்த மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயரை வெட்டிய கும்பல்

மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று செந்தில்குமார் மீது மோதி அவரை கீழே சாய்த்தனர். பின்னர் அவர்கள் பட்டாக்கத்தியால் அவரை வெட்டி விட்டு தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாருக்கும், ஒருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அவர் தான் ஆட்களை வைத்து அவரை கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பாலை இன்ஸ்பெக்டர் எஸ்தர் விசாரணை மேற்கொண்டார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க மனைவி வழக்கு

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கண்டுபிடிக்க போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன், திருப்பாலை இன்ஸ்பெக்டர் எஸ்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கள்ளத்தொடர்பு

இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.

எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்