< Back
மாநில செய்திகள்
தியாகதுருகம் அருகேதிருமணத்துக்காக வைத்திருந்த ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளைகொத்தனார் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தியாகதுருகம் அருகேதிருமணத்துக்காக வைத்திருந்த ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளைகொத்தனார் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
10 Aug 2023 6:45 PM GMT

தியாகதுருகம் அருகே கொத்தனார் வீட்டில் திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தியாகதுருகம்,

கொத்தனார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விளக்கூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் தண்டேகாரன் மகன் முருகவேல் (வயது 30). கொத்தனார். இவர் கடந்த 7-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மலையனூரில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று விட்டார். பின்னர் அவர் அங்கிருந்து நேற்று காலை குடும்பத்துடன் வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த முருகவேல் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவை பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை காணவில்லை.

நகை-பணம் கொள்ளை

இதனால் பதறிய முருகவேல் இதுபற்றி தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டதுடன், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முருகவேல் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் முருகவேல் தனது அக்காள் மகளின் திருமணத்துக்காக நகை, பணத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது.

திருமண வீட்டார் சோகம்

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர் ராஜவேல் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளை சேகரித்துச் சென்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்காக வைத்திருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் முருகவேல் மற்றும் அவரது அக்காள் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்