< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையதா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையதா?

தினத்தந்தி
|
22 Jan 2023 6:08 PM GMT

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1967-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படத் தொடங்கியது.

ஒருவருக்கு 2 ஓட்டு

ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றத்துடன் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகள் செலுத்த வேண்டியது வரும். ஒன்று மாநில சட்டசபைக்கு, மற்றொன்று நாடாளுமன்றத்திற்கு என வாக்களிக்க வேண்டும். இப்படியாக இரண்டுக்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவதால் அரசுக்கு தேர்தலுக்கான செலவு குறையும்.

இதை தவிர்த்து பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பற்றாக்குறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தவிர்த்து அரசியல் ரீதியிலான பிரச்சினைகளும் உள்ளன.

இவற்றை தாண்டி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமானதா? ஏற்புடையதா? என்பது பற்றி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு விதங்களில் கருத்துகளைக் கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

ஒரே நாள் தேர்தல் நல்லது

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை செயல்படுத்துவது எப்படி சாத்தியமாகும் என்று பார்க்க வேண்டும்.

பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தும் போது அவை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் தேதியுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக காலதாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ நடத்தும் சூழ்நிலைதான் இருக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்த பின்னரே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த முடியும். இதனை அரசியல் கட்சியினர் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் ஒரே தேதியில் தான் தேர்தல் நடந்து இருக்கிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகள் திடீரென்று கவிழ்ந்ததால் சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டிய நிலை வந்துவிடும். இதனால் நாடாளுமன்ற தேர்தல் தேதியுடன் சட்டசபை தேர்தல் தேதி ஒத்துப்போகவில்லை.

நாடாளுமன்றம், சட்டசபைக்கு தேர்தல்கள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் போது இலவசங்கள், மானியங்கள் என்று அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆலோசனை அமல்படுத்தப்பட்டால் மிகவும் நல்லது.

பொதுமக்கள் நலன்

சென்னையில் வசிக்கும் பாரதியாரின் தங்கை தங்கமாளின் கொள்ளு பேத்தி டாக்டர் இரா. உமாபாரதி:- 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில், ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே' மற்றும் 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்றெல்லாம் பொதுமக்கள் நலன் கருதி பல கருத்துகளை எங்களுடைய தாத்தா பாரதியார் கூறிச்சென்று உள்ளார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று குரல் ஒலித்து வரும் இந்த வேளையில் அரசின் கஜானாவை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. 1 நாள், 2 நாள் என்று நாட்களை பார்க்காமல் ஓட்டு போடும் பொதுமக்களை பார்க்க வேண்டும். 2 நாட்கள் தேர்தலை நடத்தினால் அரசுக்கு ஒன்றும் பெரிய அளவில் செலவு ஏற்பட போவதில்லை. மாறாக வேட்பாளர்களுக்குத்தான் செலவு அதிகமாகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாள் தேர்தல் என்றால், நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே மாதிரியான காலநிலை இருக்கப்போவதில்லை. ஒரு பகுதியில் மழையும், ஒரு பகுதியில் வெப்பமும் இருக்கும். வேட்பாளர்களும் கடந்த முறை செய்த சாதனை பட்டியலுடன் பொதுமக்களை சந்தித்து வாக்குகளைக் கேட்க வேண்டும். நிர்வாகப் பிரச்சினையைப் பார்க்காமல் பொதுமக்கள் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

மக்களின் வரிப்பணம் வீணாகும்

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சிவகார்த்திகேயன்:- நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது தேவையற்றது, பொறுத்தமற்றது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. அரசை கலைத்தால் தேர்தலுக்கான செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

ஆட்சி கலைக்கப்படலாம்

திருக்களம்பூரை சேர்ந்த சந்திரன்:- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் ஊறுவிைளவிப்பதாகவே அமையும். மாநிலங்களை ஆளுகின்றவர்கள் மத்திய அரசுக்கு எதிர்க்கருத்துடையவர்களாக இருந்தால் ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவேற்றாமல், ஆட்சி கலைக்கப்படலாம். அதனால் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரித்து வாக்களித்த மக்களின் கருத்தை அவமதிப்பது போல் உள்ளது. ஏற்கனவே ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வந்து தமிழ்நாட்டில் உள்ள ரேஷன்கடைகளில் கொடுக்கப்படும் நுகர்பொருட்களை எல்லாம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாங்கிக்கொள்ளும் அவல நிலை உருவாகி உள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ பதவி விலகினாலோ, மரணித்தாலோ காலியாகும் இடத்திற்கு ஏற்கனவே வெற்றி பெற்றவர் எந்தக்கட்சியோ அந்த கட்சியிலிருந்து ஒருவரை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்பதும் தவறான முன்னுதாரணம். குறிப்பிட்ட வேட்பாளரின் தகுதி, தொண்டு, திறமை பார்த்துத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். ஒரே நேரத்தில் எல்லா தேர்தலையும் நடத்திவிட்டால் மத்திய, மாநில தேர்தல் ஆணையங்களுக்கு என்னதான் வேலை?. ஏற்கனவே உள்ள தேர்தல் நடைமுறைகள் தொடர்வதையே நான் ஆதரிக்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மத்திய அரசு திணிக்க நினைப்பதை எதிர்க்கிறேன்.

கூட்டணிக்கான நிர்ப்பந்தம்

கொத்தமங்கலத்தை ேசர்ந்த சமூக ஆர்வலர் சுதாகர்:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியான நடைமுறையாக இருக்காது. 50 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய கட்சிகளைவிட அந்தந்த மாநில கட்சிகளே ஆளுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்றால் அப்போதைய ஆளும் கட்சி அந்த தேர்தலை சாதகமாக்கிக் கொள்ள முடியும். இதனால் மாநில கட்சிகளின் வளர்ச்சி குறையும். அதனால் மாநில சட்டமன்றத்தேர்தலுக்கும் தேசிய கட்சிகளோடு கூட்டணிக்கான நிர்ப்பந்தம் ஏற்படும்.

கவர்னர் ஆட்சி

கறம்பக்குடியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் முருகன்:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குழப்ப நிலையை ஏற்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகவே உள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை மக்கள் 5 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தேர்வு செய்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தலை காரணம் காட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதன் பதவி காலம் முடிவதற்குள் கலைப்பது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குவது போல் அமையும். மாநில சட்டமன்றங்களில் கட்சி தாவல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆட்சி கவிழ்ப்பு போன்ற நிகழ்வுகளால் நீண்டகாலம் கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் நிலை உருவாகும். இதன் மூலம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு தனது ஆளுமையை மாநிலங்களில் செலுத்த இந்த திட்டம் வழி வகுக்கும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உயர்ந்து நிற்கும் இந்தியாவின் மாண்பை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும்.

நல்ல திட்டம்

கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ரெத்தினம்:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் நல்ல திட்டமாகவே நான் கருதுகிறேன். ஏனெனில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மூலமாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தேர்தல் செலவினங்களுக்கு என்றே பெருந்தொகை செலவாகி விடுகின்றன. மேலும் அனைத்தும் மக்களது வரிப்பணம் தான். ஒரே கட்டமாக தேர்தல் நடந்தால் செலவின தொகை மிச்சப்படுவதோடு பல நல்ல திட்டங்களுக்கும் இவை பயன்படும். இத்திட்டத்தை எத்தனை ஆண்டுகள் கழித்து மத்திய அரசு செயல்படுத்த முன் வந்தாலும் பல மாநிலங்களுக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இத்திட்டத்தை ஒரு தடவை செயல்படுத்தி விட்டால் பின்னர் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பி விடும்.

பணிச்சுமைகள் குறையும்

விராலிமலையை சேர்ந்த வக்கீல் சண்முகசுந்தரம்:- நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் இத்திட்டமானது வரவேற்கத்தக்கது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் போது வாக்காளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியும். இதனால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்கும். அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் பொழுது அதிகாரிகளின் பணிச்சுமைகள் குறையும். ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதேபோல் ஆளும் கட்சிகளின் அதிகார துஷ்பிரயோகமும் தவிர்க்கப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த முடிவை எடுக்க முடியும். ஆனால் ஏதாவது மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு பின்னர் பாதியிலேயே ஆட்சி கவிழும் பட்சத்தில் மீண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும் அல்லது தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டி இருக்கும். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது அனைத்து நேரங்களிலும் ஏற்புடையதாகுமா? என்ற கேள்வியும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்