< Back
மாநில செய்திகள்
பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?:  பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து

தினத்தந்தி
|
6 Nov 2022 6:45 PM GMT

பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கூடுதல் சுமை

தூத்துக்குடி முத்தையாபுரம் மகாநகரை சேர்ந்த ஜீனத் பீவி:-

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை 3 ரூபாயும், விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12-ம் அதிகரித்து உள்ளனர். இது பாமர மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே வீட்டு வாடகை மற்ற இதர செலவுகள் எல்லாமே அதிகரித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தனியார் பாலுக்கு இணையாக ஆவின் பால் விலையை உயர்த்துவது கூடுதல் சுமையாகி விட்டது. தமிழக அரசு பால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் விலை உயர்வால் பொதுவாக ஓட்டல்களில் டீ, காபி விலையும் அதிகரிக்கும். தற்போது ஆரஞ்சு நிற பாக்கெட் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. படிப்படியாக அனைத்து விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது. இது மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகையால் மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ள பால் விலையை உயர்த்தக்கூடாது. தற்போது உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு

தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திக்:-

பால் மக்களின் அத்தியாவசிய பொருளாக உள்ளது. இந்த பால் விலை உயரும் போது, ஏழை, எளிய மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த பால் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுவார்கள். மக்களுக்கு வாங்கும் சக்தி குறையும் போது, பாலை தவிர்த்துவிடுவார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனியார் பால் விலை அதிகமாக இருப்பதால், ஏழை, எளிய மக்கள் ஆவின் பாலை வாங்கி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் டீக்கடைகளில் டீ, காபி குடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே டீ ரூ.10, ரூ.12 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள விலை உயர்வால் டீ விலை மேலும் அதிகரிக்கும். இதனால் என்னை போன்ற ஏழை, எளியவர்கள் டீக்கடை அருகே செல்லவே அச்சப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

டீ விலை உயரும்

தூத்துக்குடியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் செந்தில் ஆறுமுகம்:-

பாலுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகத்தான் இருக்கும். தற்போது ஆவின் நிறுவனம் ஓட்டல்களுக்கான ஆவின் பால் விலையை அதிகரித்து உள்ளது. இதனால் ஓட்டல்களில் டீ, காபி விலை உயர்த்த வேண்டிய நிலை உருவாகும். அதே போன்று பாக்கெட் பாலின் விலையை பொறுத்துதான் கறவை பால் விலையை நிர்ணயம் செய்வார்கள். கறவைப்பாலின் விலையும் அதிகரிக்கும். இது போன்று திடீரென விலை உயர்த்தப்பட்டு இருப்பது சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே தனியார் பால், ஆவின் பாலை விட கூடுதலாக விற்பனை செய்து வந்தனர். தற்போது ஆவின் பால் விலை அதிகரிக்கப்பட்டு இருப்பதால், தனியார் பால் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

வரவேற்பு

எட்டயபுரத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் கண்ணன்:-

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது வரவேற்க கூடிய விஷயம்தான். விலைவாசி உயர்வு காரணமாக போதிய லாபம் இல்லாமல் இருந்து வந்தோம். தற்போது ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். இது எங்களை போன்ற பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தூத்துக்குடி- எட்டயபுரம் பால் உற்பத்தியாளர் காளிராஜ்:-

தமிழக அரசு பால் கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பசுமாடுகளுக்கு புண்ணாக்கு, தவிடு, பருத்தி விதை ஆகியவற்றை உணவாக கொடுக்கிறோம். இந்த பொருட்கள் விலை அதிகமாக உயர்ந்து விட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தோம். நாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது அரசு கொள்முதல் விலையை உயர்த்தி இருப்பதால் எங்கள் நஷ்டத்தை சற்று ஈடுகட்ட முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

--------------

(பாக்ஸ்) உங்களுக்கு தெரியுமா?

சர்வதேச அளவில் சத்தான உணவாக கருதப்படும் பாலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும், பால்வளத்துறை கொண்டாடுவதை உறுதிசெய்யும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந் தேதி சர்வதேச பால் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் சர்வதேச பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளான நவம்பர் 26-ந்தேதி தேசிய பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

--------

மேலும் செய்திகள்