< Back
மாநில செய்திகள்
சேலத்தில்  சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
சேலம்
மாநில செய்திகள்

சேலத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2022 10:25 PM GMT

சேலத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சேலம்,

யோகா தினம்

சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் யோகா தினம் கொண்டாடவில்லை. இந்த நிலையில் நேற்று சேலத்தில் பல்வேறு இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் மற்றும் பதஞ்சலி யோகா மையம் ஆகியவை இணைந்து நடத்திய யோகா தின நிகழ்ச்சி காலை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ேயாகாசனங்களை செய்தனர். அவர்களுக்கு யோகா ஆசிரியர்கள் கணபதி, ஆனந்தமுருகன், சித்ரா சக்திவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் நேரு யுவகேந்திரா இளையோர் அலுவலர் ட்ரவீன் சார்லஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பதஞ்சலி யோகா மையத்தின் ஆசிரியர் விட்டல்தாஸ், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோர்ட்டு

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் உள்பட பலர் கொண்டு யோகாசனம் செய்தனர்.

இதே போல சேலம் மரவனேரியில் உள்ள தேசிய சேவா சமிதியின் மாதவம் அலுவலகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

வாழப்பாடி கோர்ட்டு

வாழப்பாடியில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நீதிபதி சன்மதி, வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். அப்போது நீதிபதியும், பணியாளர்களும், வக்கீல்களும் பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேளூர்

வாழப்பாடி அருகே பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. விழாவிற்கு, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் கே.லட்சுமணன் யோகாசன பயிற்சி அளித்தார்.

விழாவில், டாக்டர்கள் ராகுல், கார்த்திகா, ராஜ்குமார் ஆகியோர் யோகாசன பயிற்சியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதில், டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

பா.ஜனதா

சர்வதேச யோகா தினத்தையொட்டி, மேட்டூர் நகர பா.ஜனதா கட்சி சார்பில் மேட்டூர் அணை பூங்காவில் யோகா பயிற்சி நடைபெற்றது. கட்சியின் மேட்டூர் நகர தலைவர் கணேசன் யோகா பயிற்சி அளித்தார்.

இதில் மாவட்ட மகளிரணி தலைவி மகேஸ்வரி, நகர நிர்வாகிகள் ரவி, கதிர் ராஜன், முத்துசாமி, விஜி உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

ஜலகண்டாபுரம்

ஜலகண்டாபுரம் பகுதியல் பா.ஜனதா கட்சி சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பராஜ் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் யோகா பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா கவுன்சிலர் நித்ய கலா கலந்து கொண்டார். நங்கவள்ளி மேற்கு ஒன்றிய தலைவர் சீனிவாசன் மற்றும் ராஜா, வீரபத்திரன், காமராஜ், கார்த்தி, சீனிவாசன், மோகன், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்