தர்மபுரி
லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம்
|நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி கவிழ்ந்தது
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து எலும்புதூள் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் உடன் வந்தார்.
இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய டிரைவர்களை மீட்டனர்.
தீவிர சிகிச்சை
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரியை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.