< Back
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் மோகன் வழங்கினார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மோகன் வழங்கினார்

தினத்தந்தி
|
6 July 2022 5:11 PM GMT

குறைதீர்க்கும் கூட்டத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் 437 கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் மோகன், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மனுக்கள் கொடுத்த 30 நிமிடத்தில் மூன்று சக்கர கை மிதிவண்டி வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை விரைவில் வழங்கிட உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு திட்டங்கள்

இன்று நடைபெற்ற கூட்டத்தில் 437 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் சுயதொழில் தொடங்க வங்கிக்கடனுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு, உபகரணங்கள், இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற கோரிக்கைகள் குறித்த மனுக்கள் அதிகம் வரப்பெற்றுள்ளது. இவற்றில் கடனுதவி குறித்த மனுக்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதை பெற்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து இம்முகாமில் மூன்று சக்கர மிதிவண்டி, சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், நவீன காதொலி கருவி என 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்