< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு காளையை கேலி செய்த விவகாரத்தில்கூலி தொழிலாளி அடித்துக்கொலை
திருச்சி
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு காளையை கேலி செய்த விவகாரத்தில்கூலி தொழிலாளி அடித்துக்கொலை

தினத்தந்தி
|
12 Jun 2023 7:01 PM GMT

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளையை கேலி செய்த விவகாரத்தில் கூலி தொழிலாளியை அடித்துக்கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளையை கேலி செய்த விவகாரத்தில் கூலி தொழிலாளியை அடித்துக்கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டு காளை

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை புங்கனூர் கீழத் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 50). கூலி தொழிலாளியான இவர் கிடைத்த வேலையை செய்து வந்தார். இவருடைய சொந்த ஊர் லால்குடியை அடுத்த பூவாளூர்.

இவர் தற்போது தனது மனைவியின் சொந்த ஊரான புங்கனூர் கீழத் தெருவில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். தமிழரசனின் மூத்த மகன் பிரசாந்த் (27). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இதேபோல் அவர்களது உறவினர்களான ஸ்ரீரங்கம் தாலுகா புங்கனூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துவீரன் என்பவரது மகன்கள் சரத்குமார் (26), ரஞ்சித் (24) ஆகியோரும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றனர்.

தகராறு

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் புங்கனூர் அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தமிழரசனும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய் ? உனது காளை ஆட்டுக்குட்டி போன்று உள்ளது. உனது காளையை அடக்கி விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பிரசாந்துக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி பிரசாந்த்தை அடிக்க வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரசாந்தின் தந்தை தமிழரசன் தகராறில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சரத்குமார், ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து தமிழரசனை மார்பில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே தமிழரசன் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மோட்டார் சைக்கிள் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

கொலை வழக்கு

இதனை அடுத்து பிரசாந்த் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சரத்குமார், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்