< Back
மாநில செய்திகள்
கோபி போலீஸ் நிலையம் முன்புபெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நர்சால் பரபரப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி போலீஸ் நிலையம் முன்புபெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நர்சால் பரபரப்பு

தினத்தந்தி
|
5 Sep 2023 10:05 PM GMT

கோபி போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நர்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடத்தூர்

கோபி போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நர்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலித்து ஏமாற்றியதாக புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளைத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் ஜெயசுதா (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாணிப்புத்தூரை சேர்ந்த வசந்த் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயற்சி

இதைத்தொடர்ந்து அவர் நேற்று மாலை கோபி போலீஸ் நிலையம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறி அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த போலீசார் அவரிடம், 'இதுசம்பந்தமாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஒரே சம்பவத்தை மற்றொரு வழக்காக பதிவு செய்ய இயலாது' என கூறியுள்ளனர்.

ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் போலீஸ் நிலையம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அதிலிருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இது குறித்து கோபி போலீசார் நர்சு ஜெயசுதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்