< Back
மாநில செய்திகள்
நில அபகரிப்பு தொடர்பாக  போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை  தேனி கோர்ட்டு தீர்ப்பு
தேனி
மாநில செய்திகள்

நில அபகரிப்பு தொடர்பாக போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தேனி கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
28 Jun 2022 2:21 PM GMT

நில அபகரிப்பு தொடர்பாக போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ஆண்டிப்பட்டி அருகே அய்யனத்தேவன்பட்டியை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 61). இவர், தனது தந்தை வெள்ளைச்சாமி பெயரில் இருந்த நிலத்தை சிலர் அபகரித்து, மற்றொருவருக்கு விற்பனை செய்து விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, காசிமாயன் போலீசாரிடம் ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தார். அந்த ஆவணத்தின் உண்மைத்தன்மையை போலீசார் அறிய முயன்ற போது, அது போலியான ஆவணம் என்று தெரியவந்தது. இதையடுத்து போலியான ஆவணத்தை கொடுத்த காசிமாயன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி தீர்ப்பளித்தார்.

அதில், போலி ஆவணம் தயாரித்ததற்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாத கடுங்காவல் சிறை தண்டனை, போலியான ஆவணத்தை பயன்படுத்தியதற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாத சிறை தண்டனை, பொய்யான புகார் கொடுத்ததற்கு 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்