< Back
மாநில செய்திகள்
சிதம்பரத்தில்  ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை  மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
4 Sep 2022 3:33 PM GMT

சிதம்பரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரில் வசித்து வருபவர் ஜெயபாலன் (வயது 74). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஜெயபாலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குஜராத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டிருந்தது.

ரூ.6 லட்சம் கொள்ளை

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இருந்த பொருட்களை சோதனை செய்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கத்தை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்