< Back
மாநில செய்திகள்
எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை - நெல்லை மேயர் சரவணன் விளக்கம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

"எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை" - நெல்லை மேயர் சரவணன் விளக்கம்

தினத்தந்தி
|
31 Aug 2023 9:04 PM GMT

“எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை” என்று நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த பி.எம்.சரவணன் உள்ளார். இவர் மீது கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். மேலும் மாநகராட்சி கூட்டத்திலும் தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டு உள்ளனர். சமீபத்தில் மேயரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்ததாக தகவல் பரவியது.

நேற்று பி.எம்.சரவணன், சென்னைக்கு சென்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்றும், இது தொடர்பாக அவர் கட்சி தலைமையை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் நெல்லையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த தகவலை அவர் மறுத்து உள்ளார். இதுகுறித்து மேயர் பி.எம்.சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் எனது மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. அவ்வாறு நான் ராஜினாமா எதுவும் செய்யவில்லை. அந்த தகவலில் உண்மையில்லை. முற்றிலும் பொய்யானது.

எனது மகன் கல்லூரி படிப்பு விஷயமாகவும், சொந்த வேலைக்காகவும் சென்னைக்கு வந்துள்ளேன். நான் சென்னைக்கு செல்லும் போதெல்லாம் இதுபோல் தொடர்ச்சியாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்