< Back
மாநில செய்திகள்
தடுப்புச்சுவரில் கார் மோதி கணவர் பலி:   மனைவி, மகள் உள்பட 5 பேர் காயம்
கரூர்
மாநில செய்திகள்

தடுப்புச்சுவரில் கார் மோதி கணவர் பலி: மனைவி, மகள் உள்பட 5 பேர் காயம்

தினத்தந்தி
|
15 May 2023 7:04 PM GMT

அரவக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த கார் தடுப்புச்சுவரில் மோதி கணவர் பலியானார். அவரது மனைவி, மகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

கோவிலுக்கு வந்தனர்

திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள அலங்காநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவரது மனைவி கவிதா (38). இந்த தம்பதியின் மகள் ஹம்சிகா (11).

இந்தநிலையில் இவர்களது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், மண்ணச்சநல்லூரை சேர்ந்த மணி (39), லதா (35) ஆகிய 6 பேரும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள அஞ்சகவுண்டன்பட்டியில் நடந்து வரும் கோவில் திருவிழாவிற்கு சென்று வர முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் செந்தில்குமார், கவிதா, ஹம்சிகா, ரமேஷ், மணி, லதா ஆகிய 6 பேரும் ஒரு காரில் திருச்சியில் இருந்து அஞ்சகவுண்டன்பட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை மணி ஓட்டி வந்தார்.

கார் கவிழ்ந்தது

அப்போது அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலையப்பட்டி பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து செந்தில்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்