< Back
மாநில செய்திகள்
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு வீட்டு மனை, ரேஷன்கார்டு-தர்மபுரி கலெக்டர் உடனடி நடவடிக்கை
தர்மபுரி
மாநில செய்திகள்

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு வீட்டு மனை, ரேஷன்கார்டு-தர்மபுரி கலெக்டர் உடனடி நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Aug 2022 5:28 PM GMT

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு வீட்டு மனை, ரேஷன்கார்டை உடனடியாக வழங்கி தர்மபுரி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது அந்த கோவிலில் அருகில் மனநலம் குன்றிய மகனோடு லட்சுமி என்ற பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

இது பற்றி அவரிடம் விசாரித்தபோது மொண்டுகுழி கிராமத்தை சேர்ந்த அவருடைய கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது தெரிய வந்தது. 12 வயது மகள் தீர்த்தமலை அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த விதவையான லட்சுமி மற்றும் அவருடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேலனூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் லட்சுமிக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் புதிய ரேஷன்கார்டை கலெக்டர் சாந்தி வழங்கினார். அதே பகுதியில் வசிக்கும் 20 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 5 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. அப்போது லட்சுமி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கலெக்டருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்