< Back
மாநில செய்திகள்
கோடை விடுமுறையையொட்டிசுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டிய ஒகேனக்கல்
தர்மபுரி
மாநில செய்திகள்

கோடை விடுமுறையையொட்டிசுற்றுலா பயணிகள் குவிந்ததால் களைகட்டிய ஒகேனக்கல்

தினத்தந்தி
|
28 May 2023 7:00 PM GMT

பென்னாகரம்:

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களைகட்டியது.

பரிசல் சவாரி

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியல் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இந்த நிலையில் நேற்று கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் நேற்று களை கட்டியது. அங்குள்ள கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பாதுகாப்பு பணி

இதற்கிடையே போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட தூரத்திற்கு நடந்து சென்றனர். மேலும் ஒகேனக்கல் ஆலம்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் போலீசார் தீவிர ரோந்து மற்றும் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்