< Back
மாநில செய்திகள்
கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தொடங்கியது:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புபரிசல் இயக்க 2-வது நாளாக தடை
தர்மபுரி
மாநில செய்திகள்

கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தொடங்கியது:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புபரிசல் இயக்க 2-வது நாளாக தடை

தினத்தந்தி
|
27 July 2023 7:00 PM GMT

பென்னாகரம்:

கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது மேலும் அதிகரித்து மாலை 3 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

2-வது நாளாக தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 2-வது நாளாக தடை விதித்துள்ளது. இதனால் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அருவிகள் மற்றும் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்