அரியலூர்
கனரக வாகனங்களில் மண் மீது தார்ப்பாயால் மூட வேண்டும்; வாகன ஓட்டிகள் கோரிக்கை
|கனரக வாகனங்களில் மண் மீது தார்ப்பாயால் மூட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
ஏரி மண்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் இருந்து சிதம்பரம் வரை தற்போது இரண்டு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக மீன்சுருட்டி அருகே உள்ள பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு மீன்சுருட்டி பகுதியில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக சிதம்பரம் வரை கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது இந்த சாலை அமைக்கும் பணிக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் லேசான காற்று வீசி வருவதால், கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் மண் காற்றில் பறக்கிறது. இதனால் அந்த வாகனங்களின் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களின் மண் துகள்கள் விழுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கோரிக்கை
இதேபோல் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக கனரக வாகனங்களில் மண் எடுத்து செல்கின்றனர்.
எனவே பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுத்து வரும் கனரக வாகனங்களிலும், நான்கு வழிச்சாலைக்காக மண் கொண்டு செல்லும் கனரக வாகனங்களிலும் இருந்து மண் துகள்கள் பறக்காமல் இருக்க தண்ணீர் தெளித்து தார்ப்பாயால் மூடி, மண்துகள்கள் பறக்காத வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.