< Back
மாநில செய்திகள்
நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.68.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.68.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

தினத்தந்தி
|
7 Aug 2023 7:00 PM GMT

நாமக்கல்லில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.68 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் உமா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 386 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83 ஆயிரத்து 500 வீதம் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு டிராக்டர் மற்றும் பயணியர் வாகனம் வாங்க ரூ.29 லட்சத்து 9 ஆயிரத்து 120 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.33 லட்சம் வங்கி கடன் இணைப்பிற்கான ஆணைகள் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.68 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்