< Back
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த2 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவிகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த2 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவிகள்

தினத்தந்தி
|
20 Feb 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 272 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை உத்தரவிட்டார்.

இதில் காதொலிக் கருவி கோரி மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,800 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பில் 2 காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பரிசு

இதேபோல் உலக சிக்கனநாளை முன்னிட்டு சிறுசேமிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

மேலும் நாமக்கல் மாவட்ட அளவில் மகளிர் முகவர் மற்றும் நிலை முகவர்களில், சிறுசேமிப்பு முதலீட்டில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கியவர்களுக்கு கேடயங்களையும், வட்டார மற்றும் நகராட்சி அளவில் முகவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்