< Back
மாநில செய்திகள்
பசுமை தமிழகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும்
சிவகங்கை
மாநில செய்திகள்

பசுமை தமிழகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும்

தினத்தந்தி
|
12 Oct 2022 6:45 PM GMT

மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு, நல்ல முறையில் பராமரித்து பசுமை தமிழகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

காரைக்குடி,

மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு, நல்ல முறையில் பராமரித்து பசுமை தமிழகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

பசுமை தமிழகம்

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக கிளை சார்பில் பசுமை திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசியதாவது:- முதல்-அமைச்சர் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு அதை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு பொதுமக்களின் பங்களிப்புடன் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ கழக காரைக்குடி கிளை சார்பில் தானாக முன்வந்து அரசுடன் இணைந்து சிவகங்கை பசுமை திருவிழா என்ற பெயரில் ஒரு வார காலத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு அதன் தொடக்கமாக இன்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

உறுதுணையாக இருக்க வேண்டும்

இந்த மரக்கன்றுகளை பெறும் மாணவர்கள், பொதுமக்கள் அதை முறையாக பராமரித்து பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இதேபோல் மரக்கன்றுகளை வழங்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. அவர்களும் பசுமை தமிழகம் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மரக்கன்றுகளை வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கலெக்டர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் சந்திரமோகன், குமரேசன், பாலாஜி, காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதிராஜன், கேசவன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்