< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு

தினத்தந்தி
|
12 Sep 2024 6:51 PM GMT

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியர்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், அதிகபட்ச பணிக்கொடை தொகையில் இருந்து 25 சதவீதம் அதாவது ரூ.20 லட்சத்துக்கு, ரூ.5 லட்சம் என்ற அளவில், அகவிலைப்படியின் அளவு 50 சதவீதத்தை தாண்டும் போது பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்கள், ஒய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியானது, 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல், 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி, ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்புக் கால பணிக்கொடையானது ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதன் அடிப்படையில், தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்தது.

இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இதில் பயன்பெறுவார்கள். இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தகுந்த உத்தரவுகளை கருவூல அதிகாரிகள், சார் கருவூல அதிகாரிகள், ஒய்வூதிய வழங்கல் அதிகாரிகள், ஒய்வு பெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்