< Back
மாநில செய்திகள்
நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கடலூர்
மாநில செய்திகள்

நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தினத்தந்தி
|
27 March 2023 7:08 PM GMT

விபத்தில் பள்ளி மாணவி சாவு தொடர்பான வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பண்ருட்டி அருகே இடையார்குப்பம் சிறுநங்கைவாடி பலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து மகள் தனலட்சுமி (வயது 16). சி.என். பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 22.6.2018 அன்று சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் கொஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், பஸ்சில் நின்ற படி பயணம் செய்த தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அவரது பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த தனலட்சுமி குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.9 லட்சம் மற்றும் 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இது வரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்