ஊட்டி மலை ரெயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி..!
|ஊட்டி மலை ரெயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 3-ம் தேதி இரவு கவர்னர் ஆர்.என்.ரவி சென்றார். அதன்பின்னர் 5-ம் தேதி ராஜ்பவனில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி மனைவி லட்சுமியுடன் ராஜ்பவன் வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்நிலையில், இன்று கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமியுடன் ஊட்டி ரெயில் நிலையத்திலிருந்து மலை ரெயில் மூலம், குன்னூர் சென்றார். ஊட்டி-குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம் குகை உள்ளிட்டவற்றை ரெயியில் பயணம் செய்துகொண்டே கவர்னர் ஆர்.என்.ரவி பார்த்து ரசித்தார். ரெயிலில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளும், கவர்னருடன் சேர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, ஊட்டி ரெயில் நிலையம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை ரெயில்வே உதவி இயக்குநர் சரவணன் புத்தகம் கொடுத்து வரவேற்றார். கவர்னர் மலை ரெயிலில் செல்வதையொட்டி மோப்ப நாய் மூலம் ரெயில் தண்டவாளங்கள், ரெயில் நிலையங்களை சோதனையிட்டனர்.