< Back
மாநில செய்திகள்
4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய மாணவி
சென்னை
மாநில செய்திகள்

4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய மாணவி

தினத்தந்தி
|
12 Sep 2022 9:18 AM GMT

4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய மாணவி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த். இவருடைய மனைவி மோகனப்பிரியா. இவர்களின் மூத்த மகள் சுபிக்‌ஷா (வயது 13). இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சுபிக்‌ஷாவுக்கு சிறு வயது முதலே அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்க வேண்டுமென ஆர்வம் ஏற்படவே பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் உலக நாடுகளின் தேசிய கீதங்களை அந்த அந்த நாட்டு மொழியில் பாடி அசத்தி வருகிறார்.

உலக சாதனை முயற்சியாக நேற்று திருவொற்றியூர் அரசு கிளை நூலகத்தில் திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மனித நேயர் வரதராஜன், தொழிற்சங்க தலைவர் துரைராஜ் ஆகியோர் தலைமையில் மாணவி சுபிக்‌ஷா, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 4 மணி நேரத்தில் அகர வரிசையில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார்.

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஆஸ்திரேலியா, அங்கோலா, கனடா, வங்காளதேசம், குவைத், மலேசியா, ஜிம்பாப்வே உள்பட 195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி அசத்தினார். 'யூடியூப்' மூலம் அந்தந்த நாட்டு தேசிய கீத பாடல்களை கேட்டு உச்சரிப்புகளை அறிந்து அதே ராகத்தில் கம்பீர குரலில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

மேலும் செய்திகள்