< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பன் அடித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி கைது
மாநில செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பன் அடித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி கைது

தினத்தந்தி
|
14 May 2024 1:21 AM GMT

பலமுறை எச்சரித்தும் கேட்காததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 32). இவர் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான சரவணன் (35) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் காளிதாசின் மனைவிக்கும், சரவணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்துள்ளார். இதை சரவணன் கேட்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் வீட்டில் இல்லாததை அறிந்த சரவணன் அவரது வீட்டுக்கு சென்று காளிதாஸ் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென காளிதாஸ் ஓசூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து சரவணன் உடனே ஓடிப்போய் பீரோ பின்புறத்தில் மறைந்து கொண்டார். அப்போது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காளிதாஸ், வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்தபோது பீரோவின் பின்புறத்தில் சரவணன் மறைந்திருப்பது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்