< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
14 Sep 2023 6:45 PM GMT

திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் மிகப்பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வழங்கிய வாக்குறுதிகள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படடு உள்ளது. 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்த ரூ.12 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளர்களுக்கு உரிமைத் தொகையை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வழங்கி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத் தொகை பெற தேர்வு பெற்றவர்களும், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்