திருச்சி
அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி
|அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மணப்பாறை:
மணப்பாறை வெள்ளையர் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜோதி (வயது 43). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் கரூர் கண்ணுடையான்பாளையம் சோமூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (50) என்பவரின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. சந்திரசேகர், கரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் தனக்கு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும், பணம் இருந்தால் வேலை வாங்கி விடலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஜோதி கடந்த 2019-ம் ஆண்டு ரூ.6 லட்சத்தை சந்திரசேகரிடம் கொடுத்தார்.
ஆனால் ஆண்டுகள் கடந்த பின்னரும் ஜோதிக்கு வேலை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது சந்திரசேகர் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து ஜோதி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.