நீலகிரி
பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
|இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி கீரின்பீல்டு பகுதியை சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு டெலிகிராம் செயலி மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து லிங்க் வந்துள்ளது. பின்னர் தொடர்பு கொண்டு பேசியவர், பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தரப்படும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், லிங்க் அனுப்பிய நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்து 34 ஆயிரம் முதலீடு செய்தார். அதன் பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் இரட்டிப்பு பணமும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து ஆன்லைன் மூலம் ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணிடம் மோசடி செய்த பணத்தை வங்கியில் முடக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.