< Back
மாநில செய்திகள்
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
2 Nov 2022 6:45 PM GMT

போலி ஆவணம் தயாரித்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சத்துக்கு வாகன கடன் பெற்று மோசடி செய்த முன்னாள் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

விழுப்புரம்

வாகன கடன் மோசடி

திண்டிவனம் அருகே மயிலம் கிளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வரவு மேலாளராக பணியாற்றி வருபவர் ஜெயகண்ணன். இதே நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் மாதம் வரை கண்டமங்கலம் அருகே துலுக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகரின் மகன் குமார்(வயது 34) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது 10.10.2019 அன்று மயிலம் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை(41) என்பவருக்கு டிராக்டர் டிப்பர் வாகனத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு வாகன கடன் வழங்கினார். இந்த கடனை பெற்ற ஏழுமலை, சரியாக கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் அவரிடம் சென்று நிதி நிறுவன ஊழியர்கள் கேட்டனர்.

அப்போது லாரி வாங்கி விற்கும் தொழில் செய்யும் திண்டிவனம் அருகே விநாயகாபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன்(47) என்பவர் ஏற்கனவே 3 வாகனங்களை விற்றபோது அவருக்கு பழக்கமான மேலாளர் குமாரும் சேர்ந்து ஏழுமலை பெயரில் பெற்ற வாகன கடன் தொகை ரூ.12 லட்சத்தை பெற்று அந்த தொகையை நிதி நிறுவனத்திற்கு செலுத்தாமல் ஈஸ்வரனின் மகன் கோபிகண்ணனின்(25) வங்கி கணக்கிற்கு செலுத்தி கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து தற்போதைய கிளை மேலாளரான ஜெயகண்ணன், ஏழுமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் முன்னாள் மேலாளர் குமார் மற்றும் அவருக்கு தெரிந்த ஈஸ்வரன், அவரது மகன் கோபிகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுசதி செய்து வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை போலியாக தயார் செய்து தங்கள் நிறுவனத்தை ஏமாற்றிதான் வாகன கடன் ரூ.12 லட்சத்தை பெற்றதாக ஏழுமலை கூறினார். அப்படியானால், தற்போது அந்த வாகனம் எங்கு உள்ளது என்றும் வாகன கடனை திருப்பி செலுத்தும்படியும் ஜெயகண்ணன் கூறினார். அதற்கு கடன் தொகையை செலுத்த முடியாது என்று ஏழுமலை கூறியதோடு ஜெயகண்ணனை அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து ஜெயகண்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீதும் துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, குமார், ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்