< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

தினத்தந்தி
|
26 March 2023 6:52 PM GMT

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா நேற்று இரவு பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பூக்களை தட்டுகளில் சுமந்தவாறும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் எடுத்து சென்றும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பால்குடங்களில் எடுத்து வந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பொங்கல் விழா

இந்தநிலையில், வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து 9-ந்தேதி பொங்கல் விழாவும், 10-ந்தேதி தேர்திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன்

இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி இலுப்பூர், சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்களை தட்டுகளில் சுமந்தவாறு இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்