< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்

கன்னி குளத்தில் மீன்பிடி திருவிழா; வலையில் பாம்புகள் சிக்கியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
12 July 2022 9:23 PM GMT

மணப்பாறை அருகே உள்ள கன்னி குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 15-க்கும் மேற்பட்ட பாம்புகள் வலையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்பிடி திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கன்னிராஜாப்பட்டியில் 60 ஏக்கர் பரப்பளவில் கன்னிகுளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்து அதிகளவில் மீன்கள் துள்ளிவிளையாடின. இந்தநிலையில் தற்போது நீர் மட்டம் குறைந்து விட்டதால் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

அதன்படி ஊர் முக்கியஸ்தர் அருணாச்சலம் குளத்தின் கரையில் நின்று வெள்ளைத் துண்டை தலைக்குமேல் சுழற்றினார். அதுவரை தண்ணீருக்கு வெளியே காத்திருந்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடி வலைகளுடன் தண்ணீரில் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர்.

பாம்புகள் சிக்கின

மீன்பிடி வலைகள் மட்டுமல்லாது மீன் பிடிக்க சிலர் கொசுவலை, மூங்கில் கூடை, கம்பி வலைகளை பயன்படுத்தியும் மீன்களை பிடித்தனர். அப்போது குளத்தின் வளர்ந்திருந்த செடி மறைவிற்கு சென்ற மீன்களைப்பிடிக்க உள்ளே சென்றபோது மீன்வலைகளில் பாம்புகளும் சிக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மீன்பிடி ஆர்வலர்கள் வலைகளில் இருந்து பாம்புகளை பிரித்தெடுக்க படாதபாடுபட்டனர். இதேபோல் வரிசையாக சுமார் 15-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீன்களோடு மீன்களாக வலைகளில் சிக்கின. மீன் வலைகளில் விஷப்பாம்புகள் சிக்கினாலும் அதனை எடுத்துப்போட்டுவிட்டு மீண்டும் உற்சாகமாக மீன் பிடித்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு இங்கு மட்டுமே அதிகளவில் பாம்புகள் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

மீன்களை அள்ளிச்சென்றனர்

விழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட மீன்களை உற்சாகத்துடன் பிடித்து பைகளில் அள்ளிச்சென்றனர். மீன்பிடி திருவிழாவில் மீன்களுடன் பாம்புகள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்