< Back
மாநில செய்திகள்
15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
15 Jun 2022 2:50 PM GMT

வடமதுரை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கிராம மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சேர்வைகாரன்பட்டியில் செக்கான்குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, தண்ணீர் இன்றி இந்த குளம் வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர்மழை காரணமாக செக்கான்குளத்தில் தண்ணீர் நிரம்பியது.

தற்போது தண்ணீர் வற்றி குறைந்த அளவு காணப்படுகிறது. இதனையடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது.

முன்னதாக மதுரைவீரன், கன்னிமார் மற்றும் ஊர் காவல் தெய்வங்களை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன்பின்னர் குளக்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி வழிபாடு நடத்தப்பட்டது.

கிராம மக்கள் உற்சாகம்

இதைத்தொடர்ந்து மீன்பிடி திருவிழா தொடங்கியது. வெள்ளை துண்டை வீசி, ஊர்நாயக்கர் வேலுச்சாமி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உற்சாகத்துடன் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

வலைகளை வீசியும், மூங்கில் கூடைகள் மூலமாகவும் மீன்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வடமதுரை, அய்யலூர், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் சாதி, மத பேதமின்றி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர்.

குளத்தில் இருந்து தேளி, விரால், ஜிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை கிராம மக்கள் ஆர்வமுடன் பிடித்தனர். ஊர் ஒற்றுமையை வளர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த மீன்பிடி திருவிழா கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் பிடித்த மீன்களை வீடுகளுக்கு எடுத்து சென்று கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டனர்.

மேலும் செய்திகள்