< Back
மாநில செய்திகள்
பிராட்வேயில் பிளாஸ்டிக் குழாய் குடோனில் தீ விபத்து
சென்னை
மாநில செய்திகள்

பிராட்வேயில் பிளாஸ்டிக் குழாய் குடோனில் தீ விபத்து

தினத்தந்தி
|
3 Oct 2022 8:32 AM GMT

பிராட்வேயில் பிளாஸ்டிக் குழாய் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.

தீ விபத்து

சென்னை மயிலாப்பூர் லேடி ஜெசிகா தெருவைச் சேர்ந்தவர் வீரன் மேத்தா (வயது 58). இவர், சென்னை பிராட்வே முத்துமாரி செட்டி தெருவில் சொந்தமாக இரும்பு கடையும், பிளாஸ்டிக் குழாய் குடோனும் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பிளாஸ்டிக் குழாய் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பிளாஸ்டிக் குழாய்கள் என்பதால் அதில் இருந்து கரும்புகை மூட்டம் வெளியேறியது.

இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் உயர்நீதிமன்றம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, ராயபுரம் ஆகிய 5 தீயணைப்பு நிலையங்்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி பிளாஸ்டிக் குழாய் குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பிளாஸ்டிக் குழாய்கள் தீயில் எரிந்து நாசமாயின.

கண் எரிச்சல்

தீ விபத்து காரணமாக எழுந்த கரும்புகையால் அந்த பகுதி பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர். இதனால் மயங்கி விழுந்த ஒரு பெண்ணை அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்ணையும் சந்தித்து நலம் விசாரித்தார். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தீ விபத்து குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்