< Back
மாநில செய்திகள்
சில ஆசிரியைகளால் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்...! நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி
மாநில செய்திகள்

சில ஆசிரியைகளால் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்...! நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
6 April 2023 11:30 AM GMT

சில ஆசிரியைகளால் இந்த விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என நடிகை அபிராமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

சென்னை

சென்னையில் நடிகை அபிராமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூரியதாவது;-

நான் கலாஷேத்ராவில் படித்திருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து முதலில் நான் பேசியபோது, விளம்பரத்துக்காக பேசுவதாக கூறினார்கள். இதன்மூலம் விளம்பரம் கிடைத்து எனக்கு ஒன்று கிடைக்கப்போவது இல்லை.

வேண்டுமென்றால், இதுபோன்ற விவகாரத்தில் தலையிடாமல், நான் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் கலாஷேத்ரா குறித்து தொடர்ச்சியாக அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்தது வெகுவாக என்னை பாதித்தது.

அந்தக் கல்லூரிக்காக குரல் கொடுக்க வேண்டியது, அங்கு படித்த ஒவ்வொரு மாணவியின் பொறுப்பு என்று உணர்ந்ததால், நான் கலாஷேத்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். அதற்காகத்தான் நான் இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தேன்.

ஒரு கல்லூரியின் மீது குற்றம்சாட்டப்பட்டால், அங்கு படிக்கும் மாணவர்களை நேரடியாக பேசவிட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் மாணவிகள் தவறாக தூண்டிவிடப்படுகிறார்கள்.

நான் படிக்கின்ற காலத்திலேயே ஒரு ஆசிரியை, ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக பேசும்படி என்னை வற்புறுத்தினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்தக் கல்லூரியில், நான் 2010 முதல் 2015 வரை படித்த மாணவிதான்.

10 ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுவதால்தான், நான் இந்த விவகாரம் குறித்து பேச வந்தேன்.

2012-13 காலக்கட்டத்தில் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது, போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கினார்கள். தற்போதும் அதேபோலத்தான் ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளனர்.

இத்தனை நாட்களாக எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவிகளை தூண்டிவிட்டு இந்த விவகாரத்தை பெரிதாக்கிவிட்டனர்.

அந்தக் கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை. எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நான் நேரடியாக அமர்ந்து பேசி என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.

ஒருவர் மீது எளிதாக குற்றம்சாட்டிவிடலாம். என்னைப் பொறுத்தவரை, சில ஆசிரியைகளால் இந்த விவகாரத்தில் மாணவிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்" என்று கூறினார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி, இந்த கலாஷேத்ரா விவகாரம் குறித்தும் பேசினார். ஏனெனில் அவர் அந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஆவார். அவர் ஒரு தரப்பில் இருக்கும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பேசக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் இந்த கல்லூரியில் பயின்ற போதெல்லாம் இதுபோன்ற எந்தவித சம்பவமும் நடந்ததில்லை. கலாஷேத்ரா என்கிற பெயரை ஒழுங்காக கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை சொல்வதை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

கலாசேத்ரா மையத்தில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில் முன்னாள் மாணவி போலி புகார் அளித்ததில் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு இருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஹரி பத்மன் மீது புகார் அளித்த முன்னாள் மாணவி மற்றும் கலாசேத்ராவில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மூத்த பெண் போலீஸ் அதிகாரிகளை கொண்டு உரிய முறையில் தனது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தன் கணவருடன் வேலை பார்க்கும் நிர்மலா நாகராஜன், நந்தினி நாகராஜன் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் தூண்டுதல் பெயரில் மீரா கிருஷ்ணன் என்ற முன்னாள் மாணவி புகார் அளித்துள்ளாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் நான்கு ஆண்டுகள் கலாஷேத்ராவில் நடனம் கற்றுக் கொண்டதாகவும் அதன் பின்பு கனடா சென்று விட்டதாகவும் கலாசேத்ரா நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது தனது கணவர் கடுமையாக நடந்து கொண்டதை கருத்தில் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்