ஈரோடு
தூக்குப்போட்டு பெண் என்ஜினீயர் தற்கொலை
|ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் என்ஜினீயர்
ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகள் மெய்நிவேதா (வயது 24). என்ஜினீயரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விடுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். உடல் நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மெய்நிவேதா வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மெய்நிவேதாவுக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது. அதனால் ராமசாமி தனது மகளுக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. அதனால் அவர் பலமுறை கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
அதைத்தொடர்ந்து ராமசாமி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது மகள் மெய்நிவேதா மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மெய்நிவேதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.