< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை

தினத்தந்தி
|
29 Jun 2022 4:22 PM GMT

கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் (மே) 24-ந் தேதி திறந்து விடப்பட்டது. வழக்கமாக மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முன்னதாக விவசாயிகள் கோடை காலத்தை முன்னிட்டு பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளிலும் பருத்தி சாகுபடி அதிக பரப்பளவில் நடந்துள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை குறைத்து அதிக அளவில் பருத்தி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழையை பயன்படுத்தி...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தது. இதை பயன்படுத்தியும், நிலத்தடி நீரை பயன்படுத்தியும் விவசாயிகள் பருத்தி பயிரை பராமரித்து வருகிறார்கள். தற்போது கொள்ளிடம் பகுதியில் பருத்தி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பல இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில் பருத்தி பயிரில் பூச்சி தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பூச்சி தாக்குதல் காரணமாக பருத்தி செடி காய்ந்து சேதம் அடைந்து வருகிறது. அதிகம் செலவு செய்து விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வந்தனர். இந்த நிலையில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து அவர்கள் கூறிய மருந்துகளை பருத்தி பயிரில் தெளித்தும் வருகின்றனர்.

குறையும் விலை...

ஆனால் பூச்சித்தக்குதல் ஓரளவுக்கு மட்டுமே குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் பருத்தி விலை குறைந்து கொண்டே வருவது விவசாயிகளை மேலும் வேதனை அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்