< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில்    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்    குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
26 Aug 2022 2:19 PM GMT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் நெல் விதைகளை தட்டுப்பாடின்றி வழங்குவதோடு, திண்டிவனம் பகுதியில் விதை உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் பலருக்கு, 2 சிலிண்டர்கள் உள்ளது, நகை கடன் உள்ளது என்று ஏதேதோ காரணங்களை கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து மீண்டும் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

முறைகேடு

மாவட்டத்தில் உள்ள 18 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் அதிகளவில் நடந்துள்ளன. குறிப்பாக வெள்ளிமேடுபேட்டை, காணை, மேல்செவலாம்பாடி உள்ளிட்ட 14 நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 15-ந் தேதியில் இருந்து இதுநாள் வரை ஒரு விவசாயிகளிடம்கூட நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. பதிவு செய்து வைத்து காத்திருந்ததுதான் மிச்சம். இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளதால் நடக்கும் தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆழாங்கால் வாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்திலிருந்து சிறுவந்தாட்டிற்கு 5 கி.மீ. தூரம் செல்லும் வாய்க்காலை 8 அடி அகலத்திற்கு பதிலாக குறுகலாக கட்டியுள்ளனர். இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விதை கிராமத்திட்டத்தில் ஏக்கருக்கு 20 கிலோ மட்டுமே விதைகள் வழங்கப்படுகிறது. 50 கிலோ வரை வழங்க வேண்டும்.

அணைக்கட்டு எப்போது சீரமைக்கப்படும்?

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைப்பது குறித்து 8 மாதங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதனை தற்காலிக சீரமைப்பு செய்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யும்படி கோரிக்கை வைத்தோம். ஆனால் பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் தற்போது கண்டமானடி உள்ளிட்ட 3 வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் கடலில் வீணாக சென்று கலந்தது. அணைக்கட்டு எப்போது சீரமைக்கப்படும்? குடிமராமத்து பணிகள் முடிந்த 49 ஏரிகளில் கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளன. அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். இதற்கு பதிலளித்து கலெக்டர் மோகன் பேசியதாவது:-

கடும் நடவடிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சாகுபடி பரப்பு அதிகரித்திருந்தபோது 87,600 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் இருப்பது தெரியவருகிறது. இதனால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விஷயத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தற்போது நெல் அறுவடை செய்து பதிவு செய்துள்ளவர்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உண்மையான விவசாயிகளா என்று உறுதி செய்த பின்னரே நெல் கொள்முதல் செய்யப்படும். யார் தவறு செய்தாலும் அது அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டை புதிதாக கட்டுவதற்கு ரூ.75 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும். மேலும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைக்க வாய்ப்பில்லை என்று நேரில் ஆய்வு செய்த வல்லுனர் குழு தெரிவித்ததால் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல் தளவானூர் பகுதியில் தண்ணீர் செல்லும் வழித்தடம் மாறியுள்ளதால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆற்றில் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.1.67 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்